இந்த உலகில் ஒரு பயங்கரமான அரக்கன் இருந்தான்
என்று அந்த நீதிக்கதை ஆரம்பித்தது.
நீதிக்கதை எப்போதும் தொடர்கதை என்பதால்
அந்த அரக்கன் இன்னும் இருக்கிறான்
என்று அதை நிகழ் கதை ஆக்கலாம்......
அவனிடம் ஏராளமான செல்வம் உண்டு,
அதைவிட ஏராளமாக ஆயுதங்கள் உண்டு,
பூவுலகம் முழுக்க அவனுக்கு கப்பம் கட்ட
குறுநில மன்னர்கள் மண்டியிட்டார்கள்...
எல்லாவற்றையும் விட எதை, எப்படி, எவ்விதம்,
கச்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என்று வழி நடத்த
சதியாலோசனைக் கூட்டமொன்று அவனிடம் இருந்தது.
அவர்கள் அந்த அரக்கனுக்கு பல முகமூடிகளை
முதலில் செய்து கொடுத்தார்கள்.....
ஒரு முகமூடியின் பெயர் சுதந்திரம்.
இன்னொன்றின் பெயர் தீவிரவாதத்திற்கு எதிரான போர்.
மற்றொன்றின் பெயர் போர்க்குற்றம்.
ஜனநாயகம், மனித உரிமை, சர்வாதிகாரத்திலிருந்து விடுதலை
என்கிற பெயர்களில் அமைந்திருந்த அந்து பல்வேறு
முகமூடிகளை அந்த அரக்கன் அடிக்கடி அணிந்து கொண்டான்.
ஆனால், கையில் கொலை வெறி ஆயுதங்களை
வைத்துக்கொள்ள மட்டும் எப்போதும் மறக்கமாட்டான்.
அவனுடைய காலை உணவுக்கு இனப்படுகொலை,
நடுவில் இளைப்பாறக் கொஞ்சம் அணு உலைகள்,
மதியத்திற்கு அரபியில் பெருகும் எண்ணெய்,
மாலையில் புத்துணர்வு பெற விஷ வாயுக்கள் ,
இரவு உணவுக்கு குண்டுவீச்சில் இறந்த அப்பாவி மக்களின் உயிர்கள்,,,,
"வெள்ளையாக இருந்தாலும் கருப்பாக இருந்தாலும்
உன் பனி இது மட்டுமல்ல. நீ உலகம் முழுவதும் மேலும்
பல கோடி அரக்கர்களை உருவாக்க வேண்டும்" என்றார்கள்
மதியாலோசனையோடு சதியாலோசனை செய்யும் மந்திரிமார்கள்.....
"ஏன்?" என்றான் 'தீவிரவாதத்தை வென்ற விடிவெள்ளி' என்ற
புது முகமூடியை அணிந்திருந்த அந்த கருப்பு அரக்கன்,....
"அப்போதுதான் உனக்கு உணவுகள் தடை இன்றி கிடைக்கும்.
உலகின் பாதுகாவலன் என்ற புதிய முக மூடியையும் உலகம் உனக்கு வழங்கும்" என்று பதில் வந்தது.
"அப்படிஎன்றால் அடுத்த குட்டி அரக்கன் யார்?" என்றான்
உலக அரக்கன் இறுமாப்புடன். மந்திரிமார்கள் தங்களுக்குள்
விவாதித்துக்கொண்டு விடை அளித்தார்கள்.
"சரி இப்போதைக்கு லிபியாவில் எனக்கு கப்பம் கட்டிய
அந்த சிறிய அரக்கனை குடும்பத்துடம் வேட்டையாடலாம்...
அந்த கொலை சாசனத்தில் இப்போது
கையொப்பம் இடுகிறேன்... அதற்கு அடுத்த வேட்டைக்கு விரைவில்
ஏற்பாடு செய்யுங்கள்" என்றான் உலக மகா அரக்கன்
இராக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட ரத்தக் கோப்பையை உறிஞ்சியபடி!!!
(நன்றி: ஆனந்த விகடன்)
No comments:
Post a Comment